people Liberation Organaisation of Tamil Elam- இதன் சுருக்கம்தான் ப்ளாட். விடுதலைப் புலிகள் இயக்கத்-திலிருந்து வெளியேற்றப்பட்ட உமா மகேஸ்வரன் தனியாகத் தொடங்கிய இயக்கம், நான் உமாவுக்கும் அந்த இயக்கத்துக்கும் நிறைய உதவிகள் செய்திருக்கிறேன்.
ஆனால் அத்தனையும் சாக்கடையில் கொட்டிய சர்க்கரையாகிப் போனது. உமா மகேஸ்வரன் இயக்கம் மட்டுமன்று; விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தவிர வேறு எந்த இயக்கமும் விடுதலை இயக்கமாக இருக்கவில்லை.
எல்லாம் கெடுதலை இயக்கங்கள். ஒரு நாள் மாலை 5 மணி இருக்கும்... ஈழத்தில் காந்திய இயக்கம் வைத்து நடத்திய மரியாதைக்குரிய டேவிட் அய்யா அவர்களும், சந்திரஹாசனும் என்னை வந்து சந்தித்தார்கள்.
அவர்கள் மிகவும் பதற்றமாகக் காணப்பட்டனர்.
‘அய்யா நீங்கள் உமாவை அழைத்து சந்ததியார் எங்கே இருக்கிறார்? என்ன ஆனார்? என்று கேளுங்கள்’ என்றார்கள். ‘ப்ளாட் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் உமாவுக்கு எதிராக, ஆனால் நியாயமாக கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார் சந்ததியார். அதற்கான பதிலை முறைப்படி சொல்லாமல் சர்வாதிகாரமாக நடந்துகொண்டிருக்கிறார் உமாமகேஸ்வரன். அதற்குப் பின்னால் சந்ததியாரைக் கொன்று எங்கோ புதைத்துவிட்டார்கள்’ என்று அவர்கள் மிகுந்த வேதனையோடு பின்னால் என்னிடம் தெரிவித்தார்கள்.
‘சரி நான் கேட்கிறேன். நீங்கள் அமைதியாக இருங்கள்’ என்று சொல்லிவிட்டு... என் உதவியாளர் மூலம் உமாவைத் தொடர்புகொண்டு வீட்டுக்கு வருமாறு சொல்லச் சொன்னேன். இரண்டு மூன்று நாட்களாக தொலைபேசித் தொடர்புக்கும் உமா கிடைக்கவில்லை. நாள் தோறும் வந்துகொண்டிருந்த அவர், வரவும் இல்லை.
ஒருநாள் தம்பி மாறன் வந்தார். அவரிடம் நான் கடுமையாக, ‘உடனடியாக உமாவை என்னை வந்து பார்க்கச் சொல்’ என்று சத்தம் போட்டேன். நான் கடுத்த முகத்தோடு சொன்ன செய்திகளை மாறன் உமாவிடம் சொல்லியிருக்கிறார்.
‘அய்யா மிகுந்த கோபத்தோடும் வருத்தத்தோடும் இருக்கிறார். அவரைப் போய் பார்’ என்று சொல்லியிருக்கிறார். ஒரு நாள் மாலை 6 மணி அளவில் என்னைத் தேடி உமா வந்தார். அவரை நான் நேராகபார்ப்பதற்குக் கூட மனம் வரவில்லை. நான் கடுமையான கோபத்தில் இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு ஒன்றும் பேசாமலே, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.
எங்கள் வாயும் உள்ளங்களும் சிறிது நேரம் பேசவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு,
‘‘முகுந்தன்... சந்ததியார் எங்கு இருக்கிறார்?’’ என்று கேட்டேன்.
‘‘அய்யா எனக்குத் தெரியாதே?’’ என்றார்.
‘‘என்ன ஆனார்?’’ என்று கேட்டேன்.
‘‘என்னய்யா இப்படி கேட்கிறீர்கள்?’’ என்றார்.
‘‘நீங்கள் அவரை என்ன செய்தீர்கள்?’’ என்று கேட்டதும் அவர் ஆடிப்போய்விட்டார்.
அவரால் கொஞ்ச நேரம் எதுவும் பேச இயலவில்லை.
‘‘நான் அவரை ஒன்றும் செய்யவில்லை. அவருக்கும் எனக்கும் என்ன பிணக்கு?’’ என்று சமாளித்தார்.
‘‘இல்லை. நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். நம்ப மாட்டேன். நீங்கள் அவரைக் கொன்றிருக்கிறீர்கள் உங்களை எல்லாம் விடுதலைப் போராளிகள் என்று நம்பி நான் உங்களுக்கு ஒரு சேவகன் போல நடந்துகொண்டேனே! அது என் முட்டாள்தனம். நீங்கள் புறப்படுங்கள். இனி இந்த வீட்டு வாசலை மிதிக்காதீர்கள். புறப்படுங்கள்’’ என்றேன்.
கீழே இறங்கிப் போய்விட்டார். அதன் பின்னர் அவர் வரவே இல்லை. சிவநேசனின் தங்கை ஒரு கடிதம் எழுதி யார் மூலமாகவோ எனக்கு ஈழத்திலிருந்து கொடுத்தனுப்பி இருந்தார்.
‘அய்யா என் அண்ணன் சிவநேசன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிகிறது. நீங்கள்தான் என் அண்ணனுக்குப் பாதுகாப்புத் தரவேண்டும்’ என்று கடிதம் வந்தது.
கடிதம் வந்த இரண்டு மூன்று நாட்கள் கழித்து சிவநேசன் என்னைக் காண வந்தார். மிகுந்த பதற்றமாகத்தான் இருந்தார். நான் சிவநேசனின் தங்கை எனக்கு எழுதிய கடிதத்தை அவரிடமே காட்டினேன்.
‘‘என்ன இது?’’ என்றேன்.
‘‘என் தங்கை எழுதியதில் தவறில்லை. உங்களுக்குத் தெரியுமா அய்யா...
ஜோதீஸ்வரனை கொஞ்ச நாட்களுக்கு முன்பு உமா சுட்டுக் கொன்றுவிட்டார்’’ என்றார் சிவநேசன்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
‘‘உண்மையாகவா?’’ என்றேன்.
‘‘உண்மை அய்யா’’ என்றார்.
‘‘சிவநேசன் நீங்கள் எங்கும் போகவேண்டாம். நம் வீட்டின் மேலே ஒரு தளம் இருக்கிறது. நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள். நான் இங்கே இருக்கும்போது யார் உங்களை என்ன செய்வார்கள் பார்க்கலாம்...’’ என்றேன்.
‘‘சரி அய்யா நான் இரண்டு மூன்று நாட்களில் வருவேன். இங்கேயே தங்கிக் கொள்கிறேன்’’ என்று சொல்லி புறப்பட்டுப் போனார் சிவநேசன்.
போனவர் மீண்டும் வரவே இல்லை.
அவரையும் உமா கொன்றுவிட்டார் என்று கேள்விப்பட்டேன்.
பிறகுதான் உமாமகேஸ்வரன் இங்கிருந்து புறப்பட்டு பம்பாய்க்குப் போய் வரதராஜ முதலியாரிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன்.
பிறகு மாலத்தீவில் ஆட்சியைக் கவிழ்க்க கூலிப்-படையாக தனது தோழர்களை அனுப்பியிருந்தார்.
ஈழ விடுதலைக்கென்று ஆயுதம் ஏந்தியவர்கள் பலரும் எப்படி வழி தவறிப்போனார்கள்?
எப்படி இவர்கள் துரோகி-களாக மாறிப்-போனார்கள் என்பதெல்லாம் நம்
தமிழ் இனத்துக்கே உரிய சாபக்கேடு.
இந்தியப் படை ஈழத்துக்கு போனபோது...
ஈ.பி.ஆர்.எல்.எப்.
ஈ.என்.டி.எல்.எப்.
டெலோ, டெலா, ப்ளாட் ஆகிய இயக்கங்கள் ரா(raw)வின் கைக்கூலிகளாக மாறி, எப்படி தம்பிக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்கினார்கள். இதயத்தில் ரத்தம் கசியவைக்கும் ஈனத்தனமான துரோக வேலையல்லவா?.
அமரர் ராஜீவ் காந்தி அனுப்பிய படையோடு இவர்கள் கைகோத்துக் கொண்டார்கள்.
இந்தியப் படைகளுக்காக இலங்கை வந்து இறங்கிய புதிய புதிய சீல் உடைக்கப்படாத ஏ.கே.47. துப்பாக்கிகளை இந்த இயக்கத்தினர் எப்படி வாங்கிக் கொண்டார்கள்?
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்த விபீஷண இயக்கங்கள் எப்படி துரோகம் செய்தன!
வெள்ளைக்காரர்கள் பிரித்தாண்டதைக் காட்டிலும் பெரிதாக கொள்ளைக்காரர்கள் தமிழர்களை பிரித்தாண்ட கதைதான் மிகக் கொடியது.
ஓர் ஏழை இனத்துக்கு எதிராக இந்தியா நடத்திய கொடுமையான படுகொலைகள் எத்தனை எத்தனை!
இந்திய நட்புறவு எத்தனை அவமானம் என்பதை உணர்ந்துகொள்ளாத தமிழர்கள், இனியாவது உணர்வார்களா என்ற கேள்விக்கு இந்தக் கணம் வரை நல்ல பதில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அந்த உமாமகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டு தொடர்வண்டிப் பாதையில் கிடந்தார் என்ற செய்திதான் எனக்குக் கிடைத்தது.
சகோதரச் சண்டை
சகோதரச் சண்டை
என்று ஓயாமல் கத்திக் கொண்டிருக்கிறாரே
அய்ந்து முறை தமிழ்நாட்டை ஆண்ட செல்வச் சீமான்...
சகோதரச் சண்டை யாரால் எப்படி நடந்தது என்பதைப் பற்றி இனியாவது நாட்டு மக்களுக்கு விளக்குவாரா?
இந்திய அமைதிப் படைக்கு ஆதரவுக் கூலிப்படையாக நின்ற இயக்கங்கள் பற்றி... எந்த விவரமும் தெரிந்துகொள்ளாமல் சகோதரச் சண்டையால்தான் நாம் தோற்றோம் என்றால்...
தெளிவு தரும் மருந்தாக இந்த விவரங்களைப் படித்துத் தெரிந்து கொள்வது நல்லது.
தன் வீட்டில் நடக்கும் சகோதரச் சண்டையை நிறுத்த வெள்ளைக் கொடி பிடிக்கட்டும். அதிகாரச் சண்டையால் சிந்தும் ரத்தத்தால் அந்த வெள்ளைக் கொடி சிவப்பாக மாறாமல் இருக்கவேண்டுமென்று ஆண்டவரை, அய்ந்து முறை தமிழகத்தை ஆண்டவரை பிரார்த்தித்து வருவோமாக...
ஆமென்!
நன்றி; புலமைப்பித்தன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக